ஃபெல்டா முதலீட்டுக் கழகத்தின் சொத்துகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக நடைபெறும் விசாரணைக்கு உதவும் வகையில், தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ஃபெல்டா தலைவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இது குறித்து எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாலிம் அமான் கூறுகையில், விசாரணையில் உள்ள சில சொத்துகளின் கொள்முதல் மற்றும் ஃஎப்ஐசியின் முதலீடுகளுக்கு இடையே தொடர்பு இருப்பதால், முன்னாள் ஃபெல்டா தலைவரிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்காக மலேசிய சிறைத் துறையின் ஒத்துழைப்பையும் எஸ்பிஆர்எம் நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஓப் ஃபெல்லா’ எனப்படும் இந்த விசாரணையில் இதுவரை 7 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஃபெல்டா மற்றும் எஃப்ஐசி இயக்குநர்கள், குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரிகள், அரசு நிறுவனங்கள், நில அதிகாரிகள், சுயாதீன மதிப்பீட்டாளர்கள், சட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட 29 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விசாரணையுடன் தொடர்புடைய இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகள், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் முன்னாள் ஃபெல்டா தலைமை இயக்குநரும், முன்னாள் எஃப்ஐசி தலைமைச் செயல் அதிகாரியும் அடங்குவர். இருவரும் தற்போது விசாரணைக்கு உதவும் வகையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.








