மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்கவும், மக்களின் நலனைப் பாதுகாக்கவும் கூட்டுறவு சங்கங்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் 4 முக்கிய பரிந்துரைகளைத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் முன்வைத்துள்ளார்.
இன்று கோலாலம்பூர் பேங்க் ராயாட் இரட்டை கோபுரத்தில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு ஆலோசனை மன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான 300-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள், படகுகள் மற்றும் மின்பிறப்பிகளுக்கும் மானிய விலையில் டீசல் மற்றும் பெட்ரோல் வழங்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் விவரித்தார்.
தவிர மக்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைத் தங்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி கூட்டுறவு கடைகளான CoopMart- டில் பெற்றுக்கொள்ளும் ‘சாரா’ திட்டத்தில் மேலும் 500 கூட்டுறவு சங்கங்கள் இணைக்கப்படவுள்ளன.
‘Business School in School’ திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்குச் சிறு வயதிலேயே வணிகத் திறன்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்குப் பாடநெறி சாரா நடவடிக்கைகளுக்கான கூடுதல் புள்ளிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதையும் அமைச்சர் ஸடீவன் சிம் விளக்கினார்.












