கோலாலம்பூர், மார்ச்.01-
மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்கள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் முறையான விசாரணை நடைமுறைகளுக்கும் உட்பட்டே இருக்க வேண்டுமே தவிர, சமூக ஊடகங்களின் அழுத்தங்களுக்குப் பணியக்கூடாது எனப் பேராசிரியர் Dr Mohd Izani Mohd Zain வலியுறுத்தியுள்ளார். இது போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், வதந்திகளைத் தவிர்க்க விசாரணை குறித்த தகவல்களை அதிகாரிகள் அவ்வப்போது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதே கருத்தை வலியுறுத்திய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், சட்டத்தின் இறையாண்மையை மதித்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். மேலும், குறிப்பிட்ட தனிநபரின் செயலை ஒட்டுமொத்த சமூகத்தோடும் இணைத்துப் பார்க்கக்கூடாது என சமூக ஊடகப் பிரபலம் டாக்டர் எஸ் மலர் சாந்தி வலியுறுத்தியுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்ட பல்கலைக்கழக மாணவர் மீதான விசாரணை மார்ச் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.








