நாடெங்கிலும் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 100 ரிங்கிட் மதிப்பிலான புகு மதானி புத்தக வவுச்சர் திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் உரையாற்றிய அன்வார், இந்த உதவியானது, புத்தகங்கள் வாங்கும் போது தள்ளுபடி முறையின் கீழ் நேரடியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு நிதி சவால்களை எதிர்கொண்டு வரும் சூழ்நிலையிலும், கல்வி மற்றும் வாசிப்பு பழக்கத்திற்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அறிவார்ந்த மற்றும் நாகரிகமான சமூகத்தை உருவாக்க இந்த உதவித் திட்டம் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நாட்டை அறிவும், கற்றலும் நிறைந்த நாகரிகமான நாடாக மாற்ற வேண்டுமெனில், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இந்த 100 ரிங்கிட்டானது புத்தகங்கள் வாங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை பெற்றோரும் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








