பினாங்கு, ஜெலுத்தோங்கில் ஜாலான் கோத்தா கியாம் பகுதியில் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் உரிமம் இல்லாத மளிகைக் கடை குடிசையை பினாங்கு தீவு மாநகராட்சி (MBPP) அதிரடியாக மூடி, இடித்து அகற்றியது.
கோழிகளின் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 29 உயிருள்ள கோழிகளும் ஒரு மின்னணு எடை கருவியும் பறிமுதல் செய்யப்பட்டன.

தேவையான அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த அந்தக் குடிசை, உரிமம் இன்றியும் செயல்பட்டு வந்தது தெரியவந்ததுடன், சட்டவிரோத மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகளும் கண்டறியப்பட்டதாக பினாங்கு மாநகராட்சி தெரிவித்தது.

அந்த இடத்தைக் காலி செய்ய உரிமையாளருக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்காலிக ஆக்கிரமிப்பு உரிமத்திற்கான விண்ணப்பமும் கடந்த ஜூலை 14ஆம் தேதி நிராகரிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, உரிமையாளரின் முன்னிலையில் அந்தக் குடிசை இடித்து அகற்றப்பட்டது.
மேலும், 2022ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக பினாங்கு மாநகராட்சி மொத்தம் 703 அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.










