கோலாலம்பூர், பிப்ரவரி.28-
ஊழியர் சேமநிதி வாரியமான ஈபிஎஃப் 2025 ம் ஆண்டிற்கான அதன் வழக்கமான மற்றும் ஷரியா சேமிப்புகளுக்கு 6.15 விழுக்காடு லாப ஈவுத் தொகையை அறிவித்துள்ளது. கவன ஈர்ப்புக்குரிய இந்த வளர்ச்சி, அந்த நிறுவனத்தின் முதலீட்டு மேலாண்மைத் திறனைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், "சவாலான உலகளாவிய சந்தை நிலவரங்களுக்கு மத்தியிலும் எட்டப்பட்டுள்ள இந்தச் சாதனை, ஈபிஎஃப்பின் வலுவான முதலீட்டு நிர்வாகத்தையும், நாட்டின் ஓய்வூதியச் சேமிப்பு முறை மீது மக்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கையையும் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசின் நிலைப்பாடு குறித்து அன்வார் மேலும் கூறுகையில், இந்தச் சிறந்த செயல்பாட்டை அரசாங்கம் வரவேற்கிறது என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு மக்களின் நலனை மேம்படுத்தும் நிலையான கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாகவும் உறுதியளித்தார்.
இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் தங்களின் எதிர்காலத்தைத் தன்னம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் திட்டமிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.








