பேராக்கில் கட்டுப்பாட்டை இழந்த விரைவுப் பேருந்தை தனது சமயோசித புத்தியால் லாரியைப் பயன்படுத்தி நிறுத்தி, 21 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர் 40 வயது வங் டக் மெங் என்பவருக்கு நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புப் பாராட்டும், 10 ஆயிரிம் ரிங்கிட் ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 15 அன்று பேராக்கின் மெனோரா சுரங்கப்பாதை அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பேருந்தின் பிரேக் பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்த லாரி ஓட்டுநர் வங் டக் மெங், பதற்றமடையாமல் தனது லாரியின் பின்புறத்தில் பேருந்தை மோதவிட்டு, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி இரு வாகனங்களையும் பாதுகாப்பாக நிறுத்தினார்.
இவரது இந்த அசாத்திய வீரச் செயலைப் பாராட்டி, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், நாடாளுமன்றத்தில் இன்று இந்தச் சம்பவத்தை அதிகாரப்பூர்வ அவைக்குறிப்பில் பதிவு செய்தார்.
மலேசிய சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் இந்த 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அவையில் இருந்த நாடாளுமன்றத் துணை சபாநாயகர் டத்தோ டாக்டர் ரம்லி முகமட் நோர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் அவருக்குத் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.








