மாரா இளையோர் அறிவியல் கல்லூரிகளான எம்ஆர்எஸ்எம்களில் நடக்கும் உளவியல் ரீதியிலான பகடி வதை சம்பவங்கள் தற்போது முக்கிய கவனமாக மாறியுள்ளதாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ரப் வஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.
எம்ஆர்எஸ்எம் வளாகங்களில் பகடிவதை சம்பவங்களை முற்றிலுமாக ஒழிக்கும் ‘பூஜ்ஜிய கொடுமைப்படுத்துதல்’ இலக்கை நோக்கி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, முன்னாள் இராணுவ வீரர்கள் எம்ஆர்எஸ்எம் விடுதிகளில் முழுநேர வார்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், உளவியல் ரீதியிலான பகடிவதைகளைக் கண்டறிந்து தடுப்பதற்கான சிறப்பு அணுகுமுறையை உருவாக்குவதற்காக யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா ஆய்வாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அஸ்ரப் வஜ்டி தெரிவித்துள்ளார்.
உளவியல் ரீதியிலான பகடிவதைகளைச் சமாளிப்பதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையை உருவாக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை தனது முகநூல் பதிவில் அஸ்ரப் வஜ்டி குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் எம்ஆர்எஸ்எம் கல்வி நிறுவனங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள “யூ டச், யூ கோ” கொள்கையானது, பகடிவதை சம்பவங்களில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காத கடுமையான அணுகுமுறையை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








