கூச்சிங், ஜூலை.26-
அடுத்த மாநிலத் தேர்தலுக்குப் பிறகு அரசாங்கம் மாறும் பட்சத்தில், சிபு-மேற்கு கரைப் பாலத் திட்டம் பாதிக்கப்படக்கூடும் என்று சரவாக் மாநில முதல்வர் அபாங் ஜொஹாரி ஓப்பேங் எச்சரித்துள்ளார்.
400 மில்லியன் மதிப்பிலான இந்தப் பாலத் திட்டம், சிபு நகரையும் ஆற்றின் மறுகரையில் உள்ள பகுதிகளையும் இணைத்து போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சிபுவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Parti Pesaka Bumiputera Bersatu மாநாட்டில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே அந்த பாலத்தின் கட்டுமானம் சாத்தியம் என்றும், மக்கள் தவறான முடிவை எடுக்கும் பட்சத்தில் அத்திட்டத்தை மறந்துவிடலாம் என்றும் Abang Johari குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சரவாக் மாநிலத்தின் மத்தியப் பகுதி வாக்காளர்கள், சிபு மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு மேலும் பல வளர்ச்சித் திட்டங்கள் வேண்டுமா என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








