Apr 16, 2026
Thisaigal NewsYouTube
பிறப்புப் பதிவில் தாமதம் வேண்டாம் - உள்துறை அமைச்சர் நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

பிறப்புப் பதிவில் தாமதம் வேண்டாம் - உள்துறை அமைச்சர் நினைவுறுத்து

Share:

குழந்தைகளின் பிறப்பை உரிய காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிறப்புப் பதிவைத் தாமதப்படுத்துவது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மலேசிய அடையாள அட்டையான MyKad பெறுவதிலும், அரசின் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறுவதிலும் இது சிக்கல்களை உருவாக்கும் என்று அவர் எச்சரித்தார்.

கடந்த ஆண்டுகளில் தாமதமான பிறப்புப் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், ஆண்டுதோறும் பதிவாகும் மொத்த எண்ணிக்கை இன்னும் கவலை அளிப்பதாகவே உள்ளது. புள்ளிவிவரங்களின்படி, 2023-இல் சுமார் 13,000-ஆக இருந்த தாமதப் பதிவுகள், 2025-இல் 10,537-ஆகக் குறைந்துள்ளன. நடப்பு ஆண்டில் மார்ச் 31 வரை 1,970 வழக்குகள் பதிவாகியுள்ளன. சராசரியாக மாதம் 1,000 பிறப்புகள் இன்னும் தாமதமாகவே பதிவு செய்யப்படுகின்றன.

சட்டப்படி, பிறப்புப் பதிவு தீபகற்ப மலேசியாவில் 60 நாட்களுக்குள்ளும், சபா மற்றும் சரவாக்கில் 40 நாட்களுக்குள்ளும் செய்யப்பட வேண்டும். நாடு முழுவதும் 212 தேசியப் பதிவுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருவதாகவும், கிராமப்புற மக்களுக்காக நடமாடும் சேவைகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பதிவு செய்யப்படாத திருமணங்கள் மற்றும் சில சமூகச் சிக்கல்களே குழந்தைகள் ஆவணங்கள் இன்றி இருப்பதற்குப் பின்னணியாக இருப்பதாகவும், இதனைத் தவிர்க்கப் பெற்றோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News