பெர்சாத்து கட்சியுடனான அரசியல் உறவை முறித்துக்கொண்டதைத் தொடர்ந்து புதிய அரசியல் அணிவகுப்பை ஆராய்ந்து வரும் பாஸ் கட்சி, வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து ஜோகூர் மாநில பாஸ் கட்சியின் ஆணையர் டத்தோ டாக்டர் மஹ்போட்ஸ் முகமது வெளியிட்டுள்ள தகவலில், தேர்தல் ஒத்துழைப்பு தொடர்பாக பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
என்றாலும், அந்த ஒத்துழைப்பு முறையான கூட்டணியாக இல்லாமல், தேர்தல் உடன்படிக்கை வடிவிலேயே அமையும் என்றும், ஒவ்வொரு கட்சியும் தங்களது சொந்த சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், பாஸ் தனது சொந்த சின்னத்தைப் பயன்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய கால அவகாசத்தை கருத்தில் கொண்டால், புதிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஜோகூர் பாஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மஹ்போட்ஸ் முகமது தெரிவித்துள்ளார்.








