அண்மைகாலமாக பள்ளி மாணவர்கள் கட்டிடங்களிலிருந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி நிர்வாகங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
ஜோகூர் பாருவில் உள்ள ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற கல்வி மடானி நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் , செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கண்ட அறைகூவலை விடுத்தார்.
"மாணவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது; பள்ளிகள் புதிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்" என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், மாணவர்களின் மனநலனைப் பாதுகாப்பதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் ஈப்போவில் படிவம் ஒன்று மாணவன் ஒருவன் பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது, கடந்த வெள்ளிக்கிழமை,சிரம்பான், செண்டாயானில் படிவம் நான்கு மாணவி ஒருவர் விழுந்து உயிரிழந்தது,
ஆகிய சம்பவங்களை மேற்கோள்காட்டி அமைச்சர் ஃபத்லினா சிடெக் மேற்கண்ட அறைகூவலை விடுத்தார்.
இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், தடுக்கவும் மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை தினமும் நினைவூட்ட வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கல்வி மடானி நிகழ்வில் கல்வி அமைச்சருடன் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.








