தாபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணைய அறிக்கை மீதான சிறப்பு மக்களவை கூட்டத்தின் போது, பெரிகாத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர்களுக்கு தாபுங் ஹாஜிக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை விட தன் மீதான அக்கறை அதிகமாக இருக்கிறதா? என்று அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலாய்-முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறும் பெரிக்காத்தான் நேஷனல், தாபுங் ஹாஜியில் தங்களது சேமிப்பை வைத்துள்ள ஏழைகள், மீனவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், போலீசார், ராணுவத்தினர் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் இல்லாததால் சிறப்புக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
எனினும், முஹ்யிட்டின் யாசின்-க்கு ஆதரவான பெர்சத்து நடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








