மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் உள்ள கலா மண்டபத்தில் நடைபெற்ற மித்ரா நிகழ்வில், தர்ம மாடானி திட்டத்தின் 4ஆம் தொடரின் கீழ் 52 இந்து ஆலயங்களுக்கு மானியங்களை வழங்கினார்.
இந்தியர்களின் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் வாயிலாக இந்த 52 இந்து ஆலயங்களுக்கும் வழங்கப்பட்ட மொத்த நிதி 1.04 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிதி, ஆலயங்களில் மாணவர்களுக்கான கலாசார மற்றும் சமய வகுப்புகளை நடத்துவதற்கும், உள்ளூர் இந்திய சமூகத்தினருக்கான சமூக மையங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது. இச்சமூக மையங்கள் கல்வி, கலாசாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான இடங்களாகச் செயல்படும் என்று 52 ஆலயங்களின் பொறுப்பாளர்களிடம் நிதி உதவியை ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ ரமணன் இதனை தெரிவித்தார்.
தர்ம மாடானி திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 676 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 13.52 மில்லியன் ரிங்கிட் நிதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்தின் மூலம் இந்து ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, சமூகத்தின் கல்வி, கலாசாரம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கு பங்களிக்கும் முக்கியமான சமூக நிறுவனங்களாக வலுப்படுத்தப்படுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை டத்தோஸ்ரீ ரமணன் விளக்கினார்.
தர்ம மடானி திட்டத்தின் கீழ் ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி சுமார் ஆயிரம் ஆலயங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் இந்த நிதி உதவிக்கு இன்னும் விண்ணப்பிக்காத ஆலய நிர்வாகங்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றார். அதேவேளையில் நிதி உதவிப் பெற்ற ஆலய நிர்வாகங்கள் தங்களின் சமூகவியல் நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், நிதியுதவி பெற்ற ஆலயங்களின் தலைவர்கள், இந்நிதியின் மூலம் தங்களது ஆலயங்களில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தங்களது கருத்துகளை திசைகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
தர்ம மாடானி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இந்த நிதி, ஆலயங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதுடன், மாணவர்களுக்கான கல்வி மற்றும் கலாசார நடவடிக்கைகள், சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள முயற்சிகளை முன்னெடுக்க உதவியாக அமையும் ஆலயத் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.








