தாபுங் ஹாஜி யாத்ரீகர்கள் நிதி வாரியம் தொடர்பான அரச விசாரணை அறிக்கை மீதான இன்றைய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு கோரியுள்ளார்.
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட குடலிறக்க பிரச்சினைக்காக நேற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், பிரதமர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றார்.
இந்நிலையில், அவர் உடல் நலம் தேறி வருவதாகவும், தொடர்ந்து உடலியக்க சிகிச்சை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் தாபுங் ஹாஜி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றக் கூட்ட விவாதங்களை தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தாபுங் ஹாஜி நிதி மற்றும் அதன் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
தாபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை அறிக்கையில், 2014 முதல் 2020 -ஆம் ஆண்டு வரை நிர்வாகம், முதலீடு மற்றும் நிதி மேலாண்மையில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாகவும், நிறுவனத்தில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.








