சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் தமது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதை தேர்தல் ஆணையத்துக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.
வோங் சென்-ன் பதவி விலகலானது நேற்று மாலை 5 மணியிலிருந்து அமலுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய ஜோஹாரி, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 54(1)-ன் கீழ் சுபாங் தொகுதி காலியானது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிவித்ததாகத் தெரிவித்தார்.
இச்சட்டப்பிரிவின்படி, தேர்தல் ஆணையம் தொகுதி காலியாகியுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பிகேஆர் கட்சியைச் சேர்ந்த வோங் சென், நேற்று திங்கட்கிழமை தனது பதவி விலகலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது








