மேற்காசிய மோதல்களால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை பாதுகாக்க, 5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 'SME நிலைப்படுத்தல் நிவாரண வசதியை' மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம், பேங்க் நெகாராவின் கவர்னர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீத் காபூரைச் சந்தித்து ஆலோசித்தார். இச்சந்திப்பில், புதிய தொழில்முனைவோருக்கு எளிதாகக் கடன் கிடைப்பதையும், உள்ளடக்கிய நிதிச் சூழலை உருவாக்குவதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இவ்வாண்டு மார்ச் நிலவரப்படி, PMKS நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகை 4,438 கோடி ரிங்கிட்டை எட்டியுள்ளது. "மலேசிய வணிகத்தை மேம்படுத்துவோம்" எனும் இலக்கின் கீழ், உலகப் பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டு உள்நாட்டு வணிகங்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல அரசு உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.








