கோலாலம்பூர், பிப்ரவரி.26-
நாடு முழுவதும் சுமார் 800-க்கும் மேற்பட்ட கொள்கலன்களில் சட்டவிரோத மின்னணுக் கழிவுகள் கொண்டு வரப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதனைத் தடுக்க ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி கூறுகையில், சுற்றுச்சூழல் துறை, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சியான MCBA மற்றும் சுங்கத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கொள்கலன்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போர்ட் கிள்ளான் போன்ற பகுதிகளில் MCBA ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்படும். சுங்கத்துறை, போலீஸ் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், புகார்கள் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும் என்று அஸாம் பாக்கி வலியுறுத்தினார்.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தலைமையில் நடைபெற்ற தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அஸாம் பாக்கி இந்தத் தகவலை வெளியிட்டார்.








