பினாங்கின் பாகான் டாலாமில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்காக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தும், மாநில அரசு, இன்னும் மத்திய அரசுக்கு, அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பிக்காதது ஏன்? என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பினாங்கு மாநில சட்டமன்ற கூட்டத்தில் பேசிய அவர், தமிழ் தேசிய இடைநிலைப்பள்ளி அமைக்கும் திட்டம் இன்னும் ஆரம்பக்கட்ட கலந்துரையாடலிலேயே இருப்பதாகவும், இது குறித்து மக்களுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்படாதது இந்திய சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் தமிழ் இடைநிலைப்பள்ளி உருவாக்கப்படுவது இந்திய மாணவர்களுக்கு பெரும் ஆதரவாக அமையும் என்றும், தற்போது இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கல்விக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், நிலம் இல்லாதது இனி தடையாக இருக்க முடியாது என்பதால், பள்ளி கட்டுமானத்திற்கான விண்ணப்பத்தை விரைவாக மத்திய அரசிடம் அனுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், திட்டம் நடைமுறைக்கு வராத சூழ்நிலை ஏற்பட்டால், தற்போதுள்ள இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி பாடங்கள் மற்றும் சிறப்பு வகுப்புகளை விரிவுபடுத்துவது குறித்து மாநில அரசு கல்வி அமைச்சுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் குமரன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.








