தீங்கு விளைவிக்கும் இணையப் பதிவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணிச்சுமை அதிகரித்து வருவதால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
இணையப் பாதுகாப்பு அமலாக்கத்தில், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி எதிர்கொண்டும் வரும் பணிச்சுமை கணிசமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இதுவரை தீங்கு விளைவிக்கும் 3 லட்சத்து 45 ஆயிரத்து 712 இணையப் பதிவுகளை எம்.சி.எம்.சி கண்டறிந்து, அவற்றை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தளங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தீங்கு விளைவிக்கும் எனக் கருதப்படும் ஒவ்வொரு இணையப் பதிவையும் அகற்றக் கோருவதற்கு முன்பு, அதற்கான ஆதாரங்களும், அது ஏன் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது என்பதற்கான விரிவான விளக்கமும் தயாரிக்கப்பட வேண்டும் என்பதையும் ஃபஹ்மி ஃபாட்சில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் எம்.சி.எம்.சி வழங்கிய தகவலின்படி, ஒவ்வொரு புகாரையும் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட இணையத் தளங்களுக்கு அனுப்புவதற்கு சராசரியாக 30 முதல் 45 நிமிடங்கள் வரை தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஜனவரி 1 முதல் கண்டறியப்பட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான தீங்கு விளைவிக்கும் பதிவுகளில் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாகக் கணக்கிட்டால், அவற்றை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட தளங்களுக்கு அனுப்புவதற்காக எம்.சி.எம்.சி மொத்தமாக 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு நேரத்தை செலவிட்டுள்ளது.
இது இந்தப் பணிக்கான மிகப்பெரிய பணிச்சுமையை வெளிப்படுத்துகிறது என்று இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.








