மலேசியாவில் நிலவி வரும் நீடித்த வெப்பமான காலநிலை, பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் இயற்கை சமநிலை மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசிய காலநிலை மாற்ற ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் டாக்டர் எஸ். மோகேஷ் இது குறித்து கூறுகையில், நீண்ட கால வறட்சி காரணமாக ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இது காட்டுத்தீ அபாயத்தை அதிகரிப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக விவசாயத் துறையில் விளைச்சல் குறைவதோடு, கால்நடைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்குச் சவாலாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
வெப்பத்தைத் தணிக்க ஏர்-கண்டிஷனர் பயன்பாடு அதிகரிப்பதால், மின்சாரத்திற்கான தேவை திடீரென உயர்ந்துள்ளது. இது நாட்டின் எரிசக்தி அமைப்பிற்கு அழுத்தத்தைக் கொடுப்பதோடு, கார்பன் வெளியேற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும் என அவர் கவலை தெரிவித்தார்.
பொது சுகாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் ஷரிபா எசாட் வான் புத்தே , குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த வெப்ப அலையினால் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார். உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கும் திறன் இவர்களுக்குக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அதிகப்படியான நீர் அருந்தவும், தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியவும், வீடுகள் மற்றும் வாகனங்களில் காற்றோட்டத்தை உறுதி செய்யவும் இதர நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.








