கோலாலம்பூர், பிப்ரவரி.27-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், தசை மற்றும் எலும்பு தொடர்பான வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்தானா நெகாரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த உடல்நலக் குறைவு காரணமாக மாமன்னரின் சில அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாமன்னருக்கு தசை, முதுகுத்தண்டு மற்றும் இடுப்புப் பகுதிகளில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் தற்போது தொடர் சிகிச்சையும், ஓய்வும் எடுத்து வருகிறார்.
மாமன்னர் முழுமையாக குணமடைய ஏதுவாக, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடல்நிலை காரணமாக, நேற்று முன்தினம் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்களுடனான நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் மாமன்னரால் கலந்து கொள்ள முடியவில்லை.
நேற்று நடைபெறவிருந்த மலேசியத் தேசிய தற்காப்புத்துறை பல்கலைக்கழக பள்ளிவாசல் திறப்பு விழாவும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று இஸ்தானா நெகாரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








