தஞ்சோங் மாலிம், டிச. 12-
பேரா, முவாலிம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆயுதமேந்தி கொள்ளைச் சம்பவங்களில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் என்று நம்பப்படும் இரு நபர்கள், இன்று போலீசாரின் அதிரடித் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜாலான் தங்சோங் மாலிம் – புரோட்டோன் சிட்டியின் பிரதான சாலையிலிருந்து வெளியேறும் பகுதியில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த இரு கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இன்று காலை 5.20 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 29 மற்றும் 37 வயதுடைய இரு கொள்ளையர்களும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக குறைந்த பட்சம் தலா 20 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளனர் என்று பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சுல்கப்லி சாரியாட் தெரிவித்தார்.
அந்த இரு கொள்ளையர்களும் சென்ற புரோட்டோன் பெர்சோனா ரக கார், சந்தேகத்திற்கு இடமாக இருந்ததைத் தொடர்ந்து ஓப் காசா முவாலிம் குற்றத்தடுப்பு ரோந்து போலீசார், அந்த காரை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
எனினும் அவ்விரு கொள்ளையர்களும் காரை நிறுத்தாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது ரோந்துப் போலீஸ் கார் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று அக்காரை தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையில் கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரை நோக்கி இரு முறை சுட்டதாக துணை கமிஷனர் சுல்கப்லி சாரியாட் தெரிவித்தார்.
போலீசாரும் பதிலடித் தாக்குதலை நடத்திய போது, இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு கொள்ளைர்களும் சம்பவ இடத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்று இன்று முவாலிம் மாவட்ட போலீஸ் தலைமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துணை கமிஷனர் சுல்கப்லி சாரியாட் இவ்விவரத்தை வெளியிட்டார்.
இரு கொள்ளையர்களை சுட்டு வீழ்த்தியது மூலம் சிக் சியூர் ரகத்திலான ஒரு கைத்துப்பாக்கி, 9mm ரகத்திலான இரண்டு தோட்ட உறைகள், இரண்டு முகமூடிகள், இரண்டு கையுறைகள், இரும்பு வெட்டி, போலி வாகனப்பதிவு எண் பட்டை முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.








