திரவ மற்றும் ஜெல் வடிவ நிகோடினை நச்சுப் பொருட்கள் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கும் அமைச்சர் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டைத் திரும்பப் பெறுமாறு கேலன் சுகாதார மற்றும் சமூகக் கொள்கை மையம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.
பொது சுகாதார நலனுக்கு முரணான ஒரு நிலைப்பாட்டைச் சுகாதார அமைச்சர் மீண்டும் எடுத்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ருல் காலிப் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய அளவில் வேப் தடைக்கு நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறிக்கொண்டு, அதே வேளையில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இவ்விரு நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நச்சுப் பொருட்கள் வாரியத்துடன் முறையான ஆலோசனை நடத்தாமல் எடுக்கப்பட்ட அந்த முடிவு சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையிலும், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டைத் தொடர்வதன் மூலம், நிகோடின் போதை குறித்த பொது சுகாதாரக் கவலைகளை விட, தோல்வியுற்ற ஒரு கொள்கைக்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது என்ற தவறான செய்தி சமூகத்திற்குச் செல்லும் என்றும், போலீசார் கூட இந்த வேப் சாதனங்களைத் தடை செய்யுமாறு தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








