செராஸ், டி.பி.எஸ் பேருந்து நிலையத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பெண்கள் கழிப்பறையின் குப்பைத் தொட்டியில், நீல நிற நெகிழிப் பையில் சுருட்டப்பட்ட நிலையில் பிறந்த பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வேலைவாய்ப்பற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நிர்வாகத்திடமிருந்து அறிக்கை கிடைத்ததாகச் செராஸ் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி ரோஸ்டி தாவூத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் இருவரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண், குடும்பத்தினரின் கண்டிப்புக்கு பயந்து கழிப்பறையிலேயே பிரசவித்து, பின்னர் குழந்தையை அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதாகத் தெரியவந்துள்ள வேளையில், இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக இந்தத் தம்பதியினர் நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டம் பிரிவு 318-ன் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.








