ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மினி கேசினோ நடத்தி வந்த கும்பலின் ரகசியக் தளம் அதிரடி சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர் புக்கிட் ஜலில் பகுதியில் அமைந்துள்ள சொகுசு குடியிருப்பு வளாகம் ஒன்றில் செயல்பட்டு வந்த இந்தச் சூதாட்ட மையத்தில் 12 உள்ளூர் ஆண்கள், 2 உள்ளூர் பெண்கள் மற்றும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் என 21 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சோதனையின்போது கேசினோ மேஜை, நூற்றுக்கணக்கான சூதாட்டக் காய்கள், சீட்டுகட்டுகள், 4,904 ரிங்கிட் ரொக்கப் பணம், மடிக்கணினி, காரோக்கி முறை மற்றும் 10.11 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து பொழுதுபோக்குச் சட்டம், திறந்தவெளி சூதாட்ட விடுதிச் சட்டம் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








