எதிர்வரும் காலங்களில் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்கள் எப்போதும் தயாராகவும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பமும் வறட்சியும் நிலவக்கூடும் என்றும், இந்த நிலைமை 2027ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் துணைப் பிரதமரும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இந்தக் காலநிலை மாற்றத்தின் காரணமாகப் பல பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து நீர் பற்றாக்குறை, காட்டுத்தீ மற்றும் பனிமூட்டம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் வழியே தற்போதைய வானிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத், மக்களின் நலனை உறுதிப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.








