ஜன.12
இரு சகோதரிகள் இஸ்லாமிய சமயத்தை சேர்ந்தவர்கள் என்று தேசிய பதிவு இலாகா மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் வாதத்தை நிராகரித்த ஷா ஆலம் உயர் நீதிமன்றம், அவ்விரு சகோதரிகளும் எந்த சமயத்திலும் இஸ்லாமியர்களாக இருந்ததில்லை என்றும், /அவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.
20 வயது T. நிவேதா மற்றும் 19 வயதுடைய தி. சுவேதா ஆகிய இரு சகோதரிகளும் தங்களை இந்துக்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி, தொடுத்த பூர்வாங்க வழக்கு மனுவிற்கு அனுமதி அளித்த ஷா ஆலம் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் சூங் யோ சோய், கடந்த ஜனவரி 8 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் அவ்விரு சகோதரிகளும் இந்துக்களே என்று அறிவித்தார்.
இவ்வழக்கில் பிரதிவாதிகளாக ஆஜரான தேசிய பதிவு இலாகாவின் தலைமை இயக்குநரும், மைஸ் (Mais) எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தினரும், 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டு பிறந்த அவ்விருவரும் சகோதரிகளும் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் முயற்சியாக சிவில் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்றும், இதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வாதிட்டனர்.
திருமணம் செய்து கொள்ளாமலேயே இந்து மதத்தை சேர்ந்த தந்தைக்கும், இஸ்லாத்தை சேர்ந்தவர் என்று கூறப்படும் தாயாருக்கும் பிறந்த இவ்விரு சகோதரிகளும், அவர்களின் தாயாரின் சமய நம்பிக்கையின் அடிப்படையில் வளர்ந்தவர்கள் என்று தேசிய பதிவு இலாகாவும், இஸ்லாமிய சமய மன்றம் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
எனினும் சம்பந்தப்பட்ட சகோதரிகளின் தாயார், இஸ்லாமியர் என்று கூறப்படுகிறதே தவிர அவர் ஓர் இஸ்லாமியராக இருந்துள்ளனர் என்பதை வலுப்படுத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. காரணம், அந்த மாதுவின் தாயார் ஒரு இஸ்லாமியர் என்ற போதிலும் இந்து மதத்தைச் சேர்ந்த கணவருடன் திருமணம் ஆகாமலேயே வாழ்ந்துள்ளார்.
எனவே அந்த இரு சகோதரிகளின் பாட்டியும் தாத்தாவும், தனது தாயாரை ஓர் இஸ்லாமியராக வளர்த்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அந்த இரு சகோதரிகளும் இந்துக்களே என்று நீதித்துறை ஆணையர் சூங் யோ சோய் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








