பெட்டாலிங் ஜெயா, ஜூலை.16-
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், ஊடகவியலாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குச் சிலாங்கூர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கமான Wajar, குற்றப் பத்திரிகையாளர்கள் சங்கமான CiJA ஆகியவை கூட்டாகக் கவலை தெரிவித்துள்ளன.
போலீஸ் படைத் துணைத் தலைவர் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கலந்து கொண்ட அந்நிகழ்வில், புகைப்படக் கலைஞர்கள் படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டு, போலீசாரின் அதிகாரப்பூர்வப் படங்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், செய்தியாளர் சந்திப்பிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இக்கட்டுப்பாடுகள் போலீஸ் படைத் துணைத் தலைவரின் நேரடி உத்தரவு என அதிகாரிகள் கூறியுள்ளதால், இது குறித்து புக்கிட் அமான் மற்றும் மாநில போலீஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என ஊடகச் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இத்தகையச் செயல்கள் ஊடகச் சுதந்திரத்தையும், போலீஸ்-ஊடக உறவையும் பாதிக்கும் என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.








