கோலாலம்பூர், ஜூலை.16-
ரஹ்மா அடிப்படை உதவித் திட்டமான SARA, ரஹ்மா ரொக்க உதவித் திட்டமான STR பெறும் ஒன்பது மில்லியன் மக்களிடையே 99 விழுக்காடு பயன்பாட்டு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் இதுவரை 34.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Aminolhuda Hassan - னின் கேள்விக்கு நாடாளுமன்ற இணையதளத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள நிதியமைச்சு, இத்திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினரின் வாழ்க்கைச் செலவினச் சுமைகளைக் குறைப்பதோடு, உள்ளூர் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
மைக்காட் (MyKad) வாயிலாக வழங்கப்படும் இந்த ரொக்கமில்லா உதவித் திட்டத்தின் மூலம் மக்கள் உணவு, மருந்துகள் உள்ளிட்ட 15 வகையான அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும். மக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் நோக்கில், இந்த STR மற்றும் சாரா திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2024-இல் 10 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த நிலையில், நடப்பு 2026-ஆம் ஆண்டில் 15 பில்லியன் ரிங்கிட்டாக அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








