கோலாலம்பூர், ஜூலை.16-
கோலாலம்பூர், ஜாலான் டேவான் பஹாசா டான் புஸ்தாகா சாலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில், போலீஸ் சோதனையைத் தவிர்க்க எதிர்த்திசையில் அத்துமீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் 47 வயது உள்ளூர் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலைத் தடுப்புக்கு 50 மீட்டர் முன்னதாக போலீசாரைக் கண்ட 21 வயது Yamaha மோட்டார் சைக்கிள் ஓட்டி, திடீரென ‘யு-டர்ன்’ (U-turn) அடித்து எதிர்த்திசையில் வேகமாக வந்துள்ளார். அப்போது நேர் எதிரே முறையாக வந்த மற்றொரு 400 மோட்டார் சைக்கிள் மீது அவர் நேருக்கு நேர் மோதியதாகக் கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவுத் தலைவர் Zamzuri Isa தெரிவித்தார்.
இவ்விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த 47 வயது நபர், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் மேலும் கூறினார்.








