பெட்டாலிங் ஜெயா, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட 59 வயது தொழிலதிபர் பிரான்கி விக்டர், ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தது தொடர்பாக அம்மருத்துவமனை நிர்வாகம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட விக்டர், ஸ்டென்ட் பொருத்தப்பட்ட அடுத்த நாளே உயிரிழந்தார்.
விக்டரின் மனைவி சாந்தி, கூறுகையில், தனது கணவருக்குப் பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் கருவி திடீரென நின்றதாகவும், ஆனால் அங்கிருந்த தாதியர் அது 'சாதாரணமானது' என்று கூறி அலட்சியப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது கணவருக்கு மயக்க மருந்து அளிப்பதற்கு ஒப்புதல் பெறப்படவில்லை என்றும், மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொருவரும் முரண்பட்ட விளக்கங்களை அளிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கடந்த மார்ச் 18-ஆம் தேதி சாந்திக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள மலாயா பல்லைக்கழக மருத்துவமனை நிர்வாகம், " மருத்துவமனை அளவில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, அதன் முடிவுகள் விரைவில் தெரிவிக்கப்படும்" என உறுதி அளித்துள்ளது.








