கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-
குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் உள்பட சட்டத்தை மீறுபவர்கள் அனைவருக்கும் எதிராக ஒரு போதும் சமரசப் போக்கு கடைபிடிக்கப்படாது என்று அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளது.
குறிப்பாக சிறார் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாள 2001ஆம் ஆண்டு சிறார் சட்டம் வரையப்பட்டதாகப் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஓத்மான் சைட் கூறினார்.
இந்த வழக்குகள் குறித்து சிறார் ஆணையர் விளக்கியுள்ளார். சிறார்கள் மீது குற்றம் சாட்டப்படக்கூடாது என பொருள்படும்படியான எந்த விளக்கத்தையும் அவர் கொடுக்கவில்லை. மாறாக சிறார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டால் நீதிமன்றத்தில் என்ன நடைமுறை இருக்கும் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2025 ஆசியான் சட்ட மன்ற ஆய்வரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
சிறார்கள் சட்ட ரீதியான தவறுகளைச் செய்தால் குற்றவியல் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி குற்றம் சாட்டப்படலாம் என்று பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மேலும் தெரிவித்தார்.








