கோலாலம்பூர், டிசம்பர்.29-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரஸாக்கின் அரசியல் வீழ்ச்சிக்குத் தாமே காரணம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவரது மனைவியான டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் மறுத்துள்ளார்.
அது போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அவை தமது மனநிலையையோ, உணர்வுகளையோ எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சில தரப்பினரால் தமக்கு எதிராகத் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும், அது போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து, தனது குடும்பத்தினரும், நண்பர்களும் நன்கு அறிவார்கள் என்றும் ரோஸ்மா மன்சோர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடினமான காலக் கட்டத்தில், தனது கணவர் நஜிப்புக்கும், குடும்பத்தினருக்கும் பக்கபலமாக இருப்பதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், 1எம்டிபி வழக்கில் தனது கணவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு சில தரப்பினர், குறிப்பாக சில அரசியல் தலைவர்கள், கொண்டாடுவது மட்டுமே தமக்கு மிகவும் வேதனை அளிப்பதாக ரோஸ்மா வருத்தம் தெரிவித்துள்ளார்.
சரவா மாநிலத்தில் ஏழை மாணவர்கள் பயிலும் 369 கிராமப்புறப் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தில் தனது கணவர் நஜீப்பிடமிருந்து குத்தகைப் பெற்றுத் தருவதற்கு 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள குத்தகைக்காக 187.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாகவும், அதில் 6.5 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றதாகவும் ரோஸ்மா மீது கொண்டு வரப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 970 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.








