மாணவர்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில், 1971 பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகள் சட்டமான அவுக்குவிற்குப் பதிலாக வேறு எந்தச் சட்டமும் கொண்டு வர தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மாணவர்கள் சாதாரண குடிமக்களே என்றும், குற்றம் செய்தால் அனைவருக்கும் பொருந்தும் தற்போதைய குற்றவியல் சட்டங்களே அவர்களுக்கும் பொருந்தும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாணவர்களுக்காக தனியாக அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை கட்டுப்படுத்தும் சட்டம் தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1970-ஆம் ஆண்டுகளில் மாணவர்களின் ஆர்வலராக இருந்த தன்னை கட்டுப்படுத்துவதற்காகவே அவுக்கு கொண்டு வரப்பட்டதாக அன்வார் தெரிவித்துள்ளார்.
அவுக்கு-வை முழுமையாக ரத்து செய்வது தொடர்பாக வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் தமது நிலைப்பாட்டை முன்வைக்கப் போவதாகவும் அவர் விவரித்துள்ளார்.
இதனிடையே, அவுக்குவிற்கு பதிலாக விரிவான புதிய சட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் ஸ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
நாட்டின் உயர்கல்விக்கான சட்டக் கட்டமைப்பை புதுப்பிக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








