இந்தோனேசியாவில் கடந்த மாதம் 45 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மலேசிய விமானி, கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் பலமுறை விமானப் பயணங்களைப் பயன்படுத்தி போதைப்பொருளைக் கடத்தியிருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
39 வயதான அந்த விமானி, தனது விமானப் பயண அட்டவணையைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருளைக் கொண்டு சென்றதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மலேசிய அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, மலேசியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தொடர்புகள் குறித்த தகவல்கள் கிடைத்ததாக ஹுசேன் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, கும்பலில் தொடர்புடைய எஞ்சிய உறுப்பினர்களை போலீசார் தேடி வருவதுடன், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் கிடைத்த பணப் பரிமாற்றங்களையும் பின்தொடர்ந்து வருவதாகவும் அவர் விவரித்துள்ளார்.
இதனிடையே, கேஎல்ஐஏவில் கடுமையான பாதுகாப்புச் சோதனைகளை விமானி எவ்வாறு எளிதில் கடந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.








