ஜப்பானில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவர், அந்நாட்டு போலீசாரிடமிருந்து தப்பித்து, ஏழு ஆண்டுகள் ஓடி ஒளிந்த பின்னர் நேற்று மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் வெளியிட்ட ‘ரெட் நோட்டீஸ்’ பட்டியலில் இருந்த அந்நபரை, ஜப்பான் அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் கண்டுபிடித்து கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறை இயக்குநர் எம். குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு போதைப்பொருள் மற்றும் குடிநுழைவு சட்ட மீறல் குற்றச்சாட்டில் அந்த நபரை கெடா மாநில போலீசார் முதலில் கைது செய்ததாகவும், பின்னர் விசாரணையில் அவர் தனது அடையாளத்தை மாற்றி, தன்னை மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் என பொய்யாக கூறியிருந்தது வெளிச்சத்துக்கு வந்ததாகவும் எம்.குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தடயவியல் விசாரணைகள் மூலம், கைரேகை ஒப்பீடு மற்றும் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, முக அடையாள தொழில்நுட்பத்தின் மூலம் அந்த நபரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், அந்நபரின் மரபனு மாதிரிகள் புக்கிட் அமான் மரபியல் தரவுத்தளத்துக்கு அனுப்பப்பட்டு, ஜப்பானிலிருந்து பெறப்பட்ட பதிவுகளுடன் பொருந்துவது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் எம்.குமார் தெரிவித்துள்ளார்.








