முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, அவரது முன்னாள் உதவியாளர் ச்சாய் ஜின் ஷெர்ன் எனும் ஜேம்ஸ் ச்சாய் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தேடி வருகின்றது.
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிஸி, பொருளாதார அமைச்சராகப் பதவி வகித்த போது ஜேம்ஸ் ச்சாய் அவருக்கு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் ரஃபிஸி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஜேம்ஸ் ச்சாய் தனது பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்நிலையில், ஜேம்ஸ் ச்சாய் குறித்த தகவல் தெரியும் பொதுமக்கள் உடனடியாக விசாரணை அதிகாரி ஹபிஸ் அப்துல் ஹலிமைத் தொடர்பு கொள்ளுமாறு SPRM அறிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கும், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கும் இடையிலான 1.1 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் குறித்த விசாரணையில், பொருளாதார அமைச்சின் பொதுச் செயலாளர் உட்பட பல சாட்சிகளை SPRM விசாரணை செய்யவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.








