பத்து காவான், நவம்பர்.17-
பத்து காவானை நோக்கிச் செல்லும் பினாங்கு இரண்டாவது பாலத்தில், கிலோமீட்டர் 3.8-இல், நேற்று நடத்தப்பட்ட Ops Motosikal சோதனை நடவடிக்கையின் போது, போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற 33 மோட்டார் ஓட்டிகள் கைது செய்யப்பட்டனர்.
போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அம்மோட்டார் ஓட்டிகளை நிறுத்திய போது, அவர்கள் நிற்காமல், போக்குவரத்துக்கு எதிரான திசையில் அபாயகரமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக செபராங் பிறை தென் மாவட்ட போலீஸ் தலைவர் Jay January Siowou தெரிவித்துள்ளார்.
இது போல் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவது, அவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற வாகனமோட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று Jay January குறிப்பிட்டார்.
Ops Motosikal சோதனை நடவடிக்கையின் போது, மொத்தம் 110 மோட்டார் சைக்கிளோட்டிகள் சோதனையிடப்பட்டனர் என்றும், அவர்களில் 74 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.








