தீவிரமடைந்து வரும் உலகளாவிய விநியோக நெருக்கடியிலிருந்து ஏழைகளையும் நலிவடைந்தோரையும் பாதுகாக்கும் வகையில், அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்தும், உண்மையில் தேவைப்படும் ஏழை எளியோரை நேரடியாகச் சென்றடையும் வகையில், அனைத்து அமைச்சுகளும் தங்களின் முன்னெடுப்புகளையும் உதவித் திட்டங்களையும் மறுசீரமைக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றமான எம்டிஎன் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும், நாட்டின் பொருளாதாரத்தையும் அவசரகால தயார்நிலையையும் வலுப்படுத்த பல முக்கிய திட்டங்கள் அங்கு ஆய்வு செய்யப்பட்டதாகவும் அன்வார் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், விநியோகத் தொடர்ச்சியை உறுதி செய்வதும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் உலக பொருளாதார நெருக்கடியால் மேலும் நலிவடையாமல் பாதுகாப்பதும் எம்டிஎன் முக்கிய கவனமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை என்றும் அன்வார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டும் வகையில், நடைபாதை வியாபாரக் கடைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கான வாடகைக் கட்டணங்களைக் குறைப்பதில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான டிபிகேஎல் மற்றும் 'மாரா' ஆகியவற்றை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.








