கோலாலம்பூர், ஜன.24-
நாளை சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் லஞ்ச ஊழலுக்கு எதிராக பேரணி கூட்டப் போவதாக அறிவித்துள்ள அதன் ஏற்பட்டாளர்கள், அந்த பேரணி தொடர்பான நோட்டீஸை மீண்டும் சமர்ப்பிக்கவில்லை என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.
எனினும் நிலைமையைக் கண்காணிப்பதற்கு போலீஸ்காரர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய 400 க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் துறை களம் இறக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பேரணிக்கு அனுமதி கேட்டு அதன் ஏற்பாட்டாளர்கள் தொடக்கத்தில் 2012 ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தின் கீழ் ஒரு நோட்டீஸை போலீஸ் துறையிடம் சமர்ப்பித்தனர்.
ஆனால், அந்தப் பேரணி நடத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ள வளாகத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறவில்லை என்பதால் அவர்களின் நோட்டீஸ் திரும்பித் தரப்பட்டு விட்டது. அதற்கு பிறகு அவர்கள் அந்த நோட்டீஸை மீண்டும் சமர்ப்பிக்கவில்லை என்று டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
இன்று கோலாலம்பூர் போலீஸ் துறையின் மாதாந்திர பேரணியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ருஸ்டி மேற்கண்டவாறு கூறினார்.
தங்களைப் பொறுத்தவரையில் பேரணி நடைபெறும் வளாகத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு 400 க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் களம் இறக்கப்படுவர் என்று டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.







