பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போலஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் ஷீலா ஷரோன் , தன் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடக் கோரி சமர்ப்பித்த விண்ணப்பத்தை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கோலாலம்பூர் டாங் ங் வாங்கி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரியின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாக ஷீலா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும், இதில் ஷீலா ஒரு பலிகடா என்றும் அவரது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
மேலும் இன்ஸ்பெக்டர் ஷீலாவிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சட்டத்துறை அலுவலகம் கைவிட வேண்டும் என்று மனோகரன் கோரினார்.
எனினும் சட்டத்துறை அலுவலகத்தின் முடிவை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்த மாஜிஸ்திரேட் ஐனா அஹ்ரா ஆரிஃபின் உத்தரவிட்டார்.
ஷீலாவிற்கு எதிாரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.








