பொதுமக்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து, புடி மடானி டீசல் மானியத் திட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை மடானி அரசாங்கம் அறிவித்துள்ளது.
தகுதியான மலேசியர்களுக்கு மட்டுமே டீசல் மானியம் சென்றடைவதுடன், மானிய முறைகேடுகளையும் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்ஸா அசிசான் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு டீசல் வாகனங்களின் உரிமை மாற்றக் கட்டணம் முழுமையாக விலக்கப்படும் என்று நிதி அமைச்சு சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உண்மையான வாகனப் பயனாளர்களான நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு டீசல் மானியத் தகுதியை மாற்றிக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், நிறுவனங்களுக்குச் சொந்தமான தனியார் பிக்கப் மற்றும் ஜீப் வகை டீசல் வாகனங்களுக்கும் புடி டீசல் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தகுதியான வாகன உரிமையாளர்கள் இன்று ஜூன் 27-ஆம் தேதி முதல் மைகார்ட் மூலம் லிட்டருக்கு 2.15 ரிங்கிட் விலையில் மானிய டீசலைப் பெற முடியும்.
இந்நிலையில், நாடு முழுவதும் ஜூலை 1 -ஆம் தேதி முதல் லிட்டருக்கு 2.10 ரிங்கிட் என்ற விலையில் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








