மலேசிய சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமானது சைபர் தாக்குதலால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தற்காலிகமாக முடங்கியுள்ளது.
இது குறித்து இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், இணையதள அணுகலில் ஏற்பட்டுள்ள பாதிப்பானது சைபர் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடைபெற்று வருவதுடன், இணையதளத்தை விரைவில் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மறுசீரமைப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாகக் கருதும் அமைச்சு, எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.








