தெலுக் இந்தான் வட்டாரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் நபர் ஒருவர், நிர்வாணமாக சுற்றித் திரிந்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் துறைத் தலைவர் ASP சுவா கோக் லியான் கூறுகையில் ஜாலான் லங்காப் - சுய் சாக், லங்காப் சாலையில் நேற்று இரவு 9.35 மணியளவில் ஆடவர் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிவதாக புகார் பெறப்பட்டதாக குறிப்பிட்டார்.
தகவலறிந்ததும் லங்காப் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த குற்றத் தடுப்பு ரோந்துப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், "போலீஸ் துறையினர் விரைவான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் சமூக வலைதளங்களில் வைரலானது போலவே நிர்வாண நிலையில் இருந்த 41 வயதுடைய அந்த உள்ளூர் நபரை போலீசார் கைது செய்தனர்" என்றும் அவர் கூறினார்.
மேல் நடவடிக்கைக்காக அந்த நபர், லங்காப் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு, தற்போது அவர் சிகிச்சைக்காகவும், மனநல நிபுணர்களின் பரிசோதனைக்காகவும் தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நபரின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பான வீடியோக்களைப் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட நபருக்கு முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் போலீஸ் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் கூறினார்.








