பகாங் மாநிலம், தெமர்லோவில், இரண்டு வயது சிறுவன் ஹைதர் முக்மின் கொலை செய்யப்பட்ட வழக்கில், 29 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இக்பால் பித்ரி மஸ்லான் என்ற அந்நபர் இன்று தெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி அனிஸ் அத்லினா அபு ஜோஹான் முன்னிலையில், குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த மே 11-ஆம் தேதி, தாமான் செபராங் தெமர்லோவிலுள்ள வீடு ஒன்றில், இக்பால் அச்சிறுவனை கொலை செய்ததாக குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் குழந்தை துஷ்பிரயோக வழக்காக விசாரிக்கப்பட்ட இச்சம்பவம், சிறுவனின் உடற்கூறு ஆய்வில், தலையில் கடுமையான தாக்குதலால் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கான காரணம் எனக் கண்டறியப்பட்டதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.








