ஜோர்ஜ் டவுன்,ஜன.9
பினாங்கு மாநிலத்தில் நாளை ஜனவரி 10 ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி நான்கு நாட்களுக்கு மாநிலத்தை சேர்ந்த 5 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் அல்லது பினாங்கு மக்கள் தொகையில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் அட்டவணையிடப்பட்ட குடிநீர் விநியோகத் தடைக்கு ஆளாக நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்ஙாய் டுவா நீர் சுத்திகரிப்பு மையத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு வழிவிடும் வகையில் நான்கு நாட்களுக்கு அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று பினாங்கு குடிநீர் விநியோக வாரியமான பெர்பாடானான் பெக்காலான் ஆயிர் புலாவ் பினாங் அறிவித்துள்ளது.
செபெராங் பெராய் உத்தார மற்றும் செபெராங் பெராய் தெங்ஙா ஆகிய மாவட்டங்களில் குறைந்த பட்சம் 101 இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னரே குடிநீர் விநியோகம் வழக்க நிலைமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர செபெராங் பெராய் தெங்ஙா, செபெராங் பெராய் செலாத்தான், மற்றும் பாராட் டாயா ஆகிய மாவட்டங்களில் 72 மணி நேரத்திற்கு பின்னரே தண்ணீர் விநியோகம் கிடைக்கும் என்ற அந்த வாரியம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் லோரிகளின் மூலம் குடிநீரை விநியோகிப்பதற்கு தலா 40 ஆயிரம் லிட்டர் நீர் கொள்ளளவை கொண்டுள்ள ஜம்போ லோரிகள் 27 உட்பட மொத்தம் 99 கொள்கலன் லோரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.








