கோலாலம்பூர், பிப்ரவரி.08-
பதினாறு வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் பெற்றோர்களே நிர்வகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ள அதே வேளை, பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி முழுமையான கண்காணிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது. சிறுவர்கள் தாங்களாகவே கணக்குகளை உருவாக்கிப் பயன்படுத்துவதைத் தடுப்பதே அரசின் நோக்கம் என்றும், பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் கணக்குகள் இருக்கும்போது தரவுத் திருட்டையும் தேவையற்ற நபர்களின் தொடர்பையும் தவிர்க்க முடியும் என்றும் அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
குறிப்பாகப் புகழ்பெற்ற Influencer அல்லது உள்ளடக்கத் தயாரிப்பாளர்களாக இருக்கும் பிள்ளைகளின் கணக்குகளைப் பெற்றோர்களே கையாள்வது அவர்களுக்கு அதிகப் பாதுகாப்பைத் தரும் என்று அவர் குறிப்பிட்டார். அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சிறுவர்களின் படங்கள் தவறாகச் சித்திரிக்கப்படும் அபாயம் இருப்பதால், பிள்ளைகளின் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் பகிர வேண்டாம் எனப் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








