அமானா கட்சியின் வியூகப் பிரிவு இயக்குநரான கோலசிலாங்கூர் எம்.பி. டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட்– டை புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், அந்த அமைச்சை அனுபவம் நிறைந்த ஒருவர் வழிநடத்த வேண்டும் என்ற நோக்கிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சராக இருந்த டிசுல்கிஃப்லி மீண்டும் அந்த அமைச்சு மீது முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான தேவையை கருத்தில் கொண்டு அவர் மறுபடியும் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அமைச்சரவை மாற்றத்தில் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் சலிஹா முஸ்டாஃபா பிரதமர் துறையின் கீழ் கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.








