ஜார்ஜ்டவுன், நவம்பர்.12-
கெடாவிற்குச் சொந்தமான பினாங்கு தீவு, குத்தகைக்கு விடப்பட்டதாகக் கூறி, தங்களுக்கு புத்ராஜெயா உரிமத் தொகையாக ஆண்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என மிரட்டி வரும் கெடா மந்திரி பெசார் சனூசி முகமட் நூரின் வழக்கை எதிர்கொள்வதற்கு பினாங்கு அரசு தயார் என்று மாநில முதலமைச்சர் சோன் கோன் யோவ் இன்று அறிவித்துள்ளார்.
பினாங்கு அரசு மற்றும் புத்ராஜெயாவிற்கு எதிராக வழக்குத் தொடுக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக கெடா மந்திரி பெசார் சனூசி அறிவித்ததைத் தொடர்ந்து சோவ் கோன் யோவ் எதிர்வினையாற்றியுள்ளார்.
பினாங்கு அரசுக்கு எதிராக எந்தவொரு வழக்காக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதில் பினாங்கு அரசு தயார் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் கூறிய அதே நிலைப்பாட்டைதான் தற்போதும் தாங்கள் கொண்டு இருப்பதாக சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.
பினாங்கு தீவு, உண்மையிலேயே கெடாவிற்குச் சொந்தமானதா? 1786 ஆம் ஆண்டிலிருந்து கெடாவிற்கு, பினாங்கு அரசு, கப்பம் கட்ட வேண்டுமா? என்பது குறித்து மந்திரி பெசார் சனூசி, நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும்.
கெடா மாநில அரசின் அந்த வழக்கை, நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று சோவ் கோன் யோவ் சவால் விடுத்துள்ளார்.








